முதல் தேடலுக்கான பதிலுக்கு காத்திருக்கும் சமயத்திலேயே மற்றொரு பெண் பார்க்கும் படலம் தொடங்கியது.
இந்த முறை ரொம்ப சுவாரசியமா... பெண்ணின் படமோ.. என் படமோ பெண்ணின் தந்தையாரின் விருப்பப்படி நாங்கள் அனுப்பி பார்த்துக் கொள்ளவில்லை... நேரில் தான் பார்க்கனும் என கண்டிப்பாக சொல்லிவிட்டனர்..
பார்த்தீங்களா... இக்காலத்தை.. முன்பெல்லாம் ஆண் வீட்டாரின் விருப்பப் படி தான் எந்த முடிவும் எடுப்பார்களாம்... ஒரு நல்ல சங்கதி... இதிலாவது நம் மக்கள் முன்னேறி இருக்காங்களே.. ஹிஹி
சரி விடயத்துக்கு வருவோம்...
பெண் வீட்டாரின் விருப்பப்படி நாங்கள் அவர்களின் ஊருக்கு (மாயவரம்) பயணப்பட்டோம்.. அங்கே செலவதற்குள் பெண்ணைப் பற்றி நான் அறிந்து கொண்ட சங்கதிகளை சொல்கின்றேன்.
பெண் நல்ல வடிவாம்.. உயரம் கூட பொருத்தமாம்.. படிப்பு கணினியில் முது நிலைப் பட்டம் வாங்கியவர்.. படிப்பு முடிந்து இரு ஆண்டுகள் முடிந்தும் வீட்டிலேயே வைத்திருக்கின்றார்கள்...கேட்டால், வேலைக்கு அனுப்புவதில்லை... அவ்ளோ கட்டுபெட்டியான குடும்பம்... படிக்கக்கூட உள்ளூர் கல்லூரியிலேயே...
இதனைக் கேட்டதும் ரொம்ப வேதனையாக இருந்தது... கல்லூரியில் ஒரு சீட்டை வீணாக்கிவிட்டனரே.. ஏழைக்குடும்பப் பெண்கள் பலர் சீட்டு கிடைக்காமல் பலர் இருக்க்.. படித்து விட்டு வீட்டிலேயே இருக்க... எதற்கு இந்த வீண் வேலையோ...
இவ்ளோ தான் அவர்களைப் பற்றி தெரியும்.
இந்த முறை பெண்ணின் வீட்டிற்கே செல்வதாக திட்டம்...
வீட்டில் சாப்பாடெல்லாம் தயார் செய்வதாகக் கூறினார்கள்.. நல்ல கனிவுடனே தான் பேசினார்கள்.. அதெல்லாம் வேண்டாம்.. எல்லாம் முறைப்படி நடக்கட்டும்.. இருவருக்கும் பிடித்ததும்.. விருந்தெல்லாம் வைத்துக் கொள்ளலாம்... காபி மட்டும் போதும் என்று அம்மா சொல்லி வைத்துவிட்டார்.
விடியற்காலையிலேயே கிளம்பி விட்டோம்... மாயவரத்திற்கு.. அங்கேயே பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருந்த ஒரு நல்ல தங்கும் விடுதியில் தங்கினோம். அங்கிருந்து எப்படி பெண் வீட்டிற்கு வரனும் எனபது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டு... ஒரு வாடகை மகிழுந்தில் பெண் வீட்டிற்கு சென்றோம்.
எங்களுடம் என் இளைய தாய்மாமாவும் வந்தார்... அவர் கொஞ்சம் பிற்போக்கு வாதி (இந்த பிற்போக்கான தமிழகத்தில் இவர் தான் சரியானவர்!) என்றாலும் வழக்கறிஞர் ஆகையால் நல்லா பேசக்கூடியவர்... விவரசாலி... முதல் முறை பெண் பார்க்கையில் கொஞ்சம் சொதப்பி விட்டதால் இந்த முறை அவரையும் சேர்த்துக் கொண்டோம்.
ஒரு வழியாக பெண் வீட்டாரைக் கண்டுபிடித்து வீட்டிலுள் சென்றோம்... அனைவரும் வீட்டில் வரவேற்பு அறையில் அமர... எனக்கு மட்டும் வேர்த்துக் கொட்டியது.
கொஞ்சம் சமாளித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்... பொதுவான சங்கதிகள் பேசத் தொடங்கினார்கள்.. எங்கே வேலை... தற்போது நிலவரம் எப்படி... போன்ற கேள்விகள்.. எல்லாவற்றிக்கும் பதில்களை சொன்னேன்.. பின்னர் படிப்பு பற்றி பேச்சு திரும்பியது.. எந்த ஊரில் படிப்பு.. என்ன கல்லூரி... போன்ற மேலும் மேலும் கேள்விகள் தொடர...
இது நாள் வரை வேலைக்குக் கூட இத்தனைக் கேள்விகள் என்ன்னிடம் யாரும் கேட்டதில்லை.. அத்துனைக் கேள்விகள்..
போதுமடா சாமி... என்றாகி விட்டது...
என் பதிலுக்குப்பின்னர் அதற்கு அவர்களில் நக்கல் நையாண்டி பேச்சுகள் வேறு... பெண்ணின் தந்தையாரும்..அவரின் அண்டை வீட்டு சினேகிதர்.. இருவர் மட்டும் தான்...வீட்டுப் பெண்டிர் அனைவரும் உள்ளே அமைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்..
நானும் இடையிடையே... எப்பத்தான் பெண்ணை அழைப்பார்கள் என்றும் பார்த்திருந்தேன் (காரியத்தில் ரொம்ப கெட்டிடா நீ மச்சி... ஹிஹி).
தற்சமயம் தான் தட்டில் இனிப்பு காரம்..ரொட்டிகள் எல்லாம் வைத்து அனைவருக்கும் கொடுதார்கள்.. (கொடுத்தது பெண்ணின் அம்மாவாம்)... இதெல்லாம் எதற்குங்க... என்று வழிந்துவிட்டு.. சும்மா பெயருக்கு கொஞ்சம் இனிப்பை எடுத்துக் கொண்டேன்.
அதற்குள் பெண்ணின் அப்பாவின் சினேகிதர் ...தனது மகனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வுகளைப் பற்றி அறுக்கத் தொடங்கி விட்டார்... அவரின் மகனுக்கு நன்கு படித்த பெண்ணும்.. ஆனால் வேலைக்கு செல்லாத.. சென்றேயில்லாத பெண்ணாக பார்ப்பதாகவும்.. சொன்னார்...
அதனால் தமிழகத்து அனைத்து ஆண்மகன்களும் அவ்வாறு தான் எதிர் பார்ப்பதாகவும் நினைத்துக் கொண்டு...தன் நண்பரின் மகளையும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளார் போலும்.
எல்லாம் முடிந்து இப்போது தான் பெண்ணை அழைத்தார் பெண்ணின் அப்பா.. பெண்ணானவர் கையில் காபி தட்டுடன் வந்தார்(ள்)...
' நல்லா பார்த்துக்கோப்பா ' என்று என் அம்மா காதில் கிசுகிசுக்க... காபி தம்ளரை எடுக்கும் போது பெண்ணை நேருக்கு நேர் பார்த்தேன்...
கொஞம் பூசினார் போல இருந்தார்.. அதனால் உயரம் ரொம்ப குறைவாகத் தெரிந்தது... சொல்லும்படி வடிவும் இல்லை.
அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அங்கேயே ஒரு ஓரத்தில் பெண் நிற்க...அம்மா, பெண்ணை அங்கே உட்கார சொல்ல.. ஆண்கள் இருக்க முன்னிலையில் உட்காரும் வழக்கம் எங்கள் வீட்டில் இல்லை - என்று பெண்ணின் அப்பா சொன்னார்..
ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது... அதற்கு 'சரி.. நீ உள்ளே செல்லம்மா' என்று அனுப்பி விட்டார்... ஒரே ஒரு முறைதான் பார்த்தேன்.. பெண், என்னைப் பார்த்தாரா எனவும் தெரியவில்லை.
மேலும் ஒரு கேள்வி 'என்ன பையனுக்கு நெற்றியின் அருகின் வீங்கின மாதிரி இருக்கு?' என என் நெற்றிக்கருகே பிறந்தது முதல் இருந்த ஒரு சிறிய வடிவ கட்டியைப் பார்த்து ...பதிலை நான் சொல்லியவுடன்... பெண்ணின் அப்பா.. தன் சினேகிதருடன் உள்ளே சென்று கிசுகிசுத்தனர்.. எனக்கு ஓரளவு தெரிந்துவிட்டது... இதுவும் அவ்ளோ தான் என்று :-(
எல்லாம் முடிந்து, சரி ஊருக்கு சென்று கலந்தாலோசித்துவிட்டு சொல்கின்றோம் எனச் சொல்லி விடை பெற்றோம்.
அதற்குள் முதலில் பார்த்த பெண்ணின் அப்பா கைத்தொலை பேசியில் இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டார்... வேறு பையனைப் பார்க்க இருப்பதாக அரசல் புரசலாக எங்களுக்குத் தெரிந்ததால்.. அதுவும் இல்லை என்றாகிவிட்டது.
இன்னும் இருப்பது ஒன்றே ஒன்று தான்... எனக்கும் விடுப்பும் ஒரு வாரம் கழிந்து விட்டது.. இன்னும் இருப்பதும் ஒரு வாரம் தான்.
அடுத்த படலத்திற்கு காத்திருப்போம்..
(தொடரும்...)
ஞாயிறு, பிப்ரவரி 15, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக