ஞாயிறு, பிப்ரவரி 08, 2009

தேடல்கள் - 1

எல்லா ஆண்களுக்கும் வரும் அந்த குறிப்பிட்ட நிலை எனக்கும் கிட்டியது. ஆம்... அதுதான் பெண் பார்க்கும் நிகழ்வு.

ஏறத்தாழ அரைக்கழுதையில் வயது ஆன பிறகுதான் எனக்கு வாய்த்தது... எப்பவாக இருந்தால் என்ன... எனக்கும் வாய்த்ததே என எண்ணி மகிழ்ந்த நாட்கள் அவை.

அந்த இனிய தருணங்களைத் தான் ஒவ்வொன்றாக சொல்ல உள்ளேன்.

எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் காலம் குறிப்பிட்டு இருக்க... பணியிலிருந்து வருடாந்தர விடுப்பில் பெண் பார்க்கும் படலம் தொடங்க திட்டம். ஊருக்குச் செல்லும் முன்னரே சில பல பெண்களின் நிழல் படங்கள் கிடைக்கப் பெற்றேன்... ஆனால் அதில் ஒன்றும் பிடிக்க வில்லை.

அதற்கு காரணம், மனம் இங்கே சீனாவில் காணும் பெண்களை ஒப்பிட்டு பார்த்து குழப்பமடைந்து தீர்வாக 'பிடிக்க வில்லை' எனக் கூறி இருக்கலாம் அல்லது பார்த்ததும் மனதில் 'நச்' என்று ஒட்டிக் கொள்ளும் என்பார்களே அதுவும் காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்திருந்தாலும் முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.

இருந்தாலும் நேரில் சென்று பார்த்தால் நல்ல முடிவாக அமையுமோ என்ற நினைப்பில் ஊருக்கு பயணித்தேன்.

முதல் பெண் பார்க்கும் படலம் நேரம்.. நாள் பார்த்து முடிவானது. பெண்ணின் நிழற்படம் ஏற்கனவே ஊரில் பார்த்து... என் அம்மாவிற்கு பிடித்த்தாகையால் எனக்கும் பிடித்தாக வைத்து பெண் பார்க்க சென்றோம்.

பெண் வீட்டாரின் திட்டப்படி ஏதேனும் ஒரு கோயிலில் இந்த நிகழ்வை வைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு விட்டது. சரியென ஊரின் மையப் பகுதியில் இருக்கும் முருகன் கோயிலிலேயே வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

கோயிலில் என்பதால் எனக்கும் எவ்வித சங்கடமும்... நாணமும் இருக்காததாகையால் அதுவே சரியென பட்டது. நேரத்தில் கோயிலுக்கு என் வீட்டார் சகிதம் சென்றோம்... 4மணிக்குத்தான் திறக்கப்படும் எனபதனால் கோயிலின் அலுவலகம் அருகே காத்திருந்தோம்.

காலணி காப்பகம் திறக்கப்பட அனைவரும் சென்று காலணிகளை விட்டு விட்டு அங்கேயே சிறிது நேரம் காத்திருந்தோம். அச்சமயத்தே பெண் வீட்டாரும் வந்திருந்தனர் போலும்.. முன்பின் கண்டிராததால் ஏதும் தெரியாமல்... பார்த்திருந்தோம். பின்னர் பெண்ணின் அப்பாவே தாங்கள் தான் என அறிமுகப்படுத்திக் கொள்ள... 'வணக்கம்' கூறி அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

எனக்கோ வெட்கம் பிடித்து திண்றது... பின்னர் நான், பெண்ணை அடிக்கண்ணில் பார்க்க... அவரோ(ளோ) என்னையே நோக்கினார்(ள்). கோயில் திறக்கப்பட்டு விட்டது எனத் தெரிய... அனைவரும் உள்ளே சென்றோம். நடு மண்டபத்தில் எங்கள் குடும்பம் ஒரு புறமும்.. பெண் வீட்டார் குடும்பம் மறுபுறம் அமர்ந்து கொண்டோம்.

நானும் பெண்ணும் நேருக்கும் நேராக (கிகிகி...) பெண்ணின் அப்பா தான் அதிகம் கதைத்தார்... நிறைய கேள்விகள்... சிலவற்றிக்கு நான் பதில் சொல்ல.. இடைஇடையே பெண்ணை பார்த்தேன்... அவங்களும் பட்டும் படாமல் பார்த்ததார்கள்... மணமுடித்து சீனாவிற்கு செல்ல சம்மதமா... அங்கேயே பணிபுரியவும் விருப்பமா.. இவை எமது பக்க கேள்விகள். எல்லாவற்றிக்கும் பெரிய சிரிப்பு 'விருப்பம்' என சொல்லாமல் சொல்லினார்கள்.

பெண், நிழறபடத்தில் பார்த்தைக் காட்டிலும் சிறிது வளர்த்தி அதிகமாகவே தோன்றினார்... சிரிக்கும் பொழுது... அனைத்து உள் பற்கள் உடபட தெரியும் சிரிப்பு... தமிழரின் நிறம்... என் மனதிற்கு பிடித்து போல பட்டது. இருந்தாலும் எம் வீட்டாரின் நிலை தெரிந்து கொள்ள காத்திருந்தேன். பெண் வீட்டாரின் நிலையையும் தெரிய ஆவலாக இருந்தோம்.

இவ்வாறான பேச்சுக்களின் இடையே... என்னிடம் பெண்ணிடம் தனியே பேச விருப்பமிருந்தால் போய் பேசு என.. என் அம்மா கூற.. பெண்ணிடமும் 'கோயிலை சுற்றுவது போல போய் பேசிப்பாரும்மா..' எனவும் சொல்ல... 'இல்லை.. பரவாயில்லைம்மா' என சொன்னேன். அதற்கு பெண், எழ முற்பட... ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வை நான் மறுக்கலானேன்.

ஒரு 30 நிமிட பெண் பார்க்கும் நிகழவிற்கு பின்னர் முருகனை தரிசித்து விட்டு செல்லாம் என இரு வீட்டாரும் நினைத்து உள்ளே சென்றோம். சாமி கும்பிட்டு விட்டு சுற்றி வருகையிலே நான் முன்னே நடக்க... பெண் பின்னாலேயே என்னை தொடர, நான் திரும்பி பார்த்தேன்.. அப்போது தான் தெரிந்தது என் உயரத்தை பார்க்கிறார் என.. நானும் கூச்சத்துடன் நெளிந்து ஒரு வழியே சமாளித்து கடந்த்தேன்.

என் அப்பா, அப்போதே என்னிடம் 'என்ன.. சம்மதமா' எனக்கேட்ட.. நான் வழக்கம் போல 'ஹிஹி' என வழிய.. பெண்ணின் அப்பா 'வீட்டிற்குப்போய் கலந்தாலோசித்து விட்டு சொல்கிறோம்' என சொல்லி விட்டார்.

நாமும் 'சரி.. அப்படியே செய்யலாம்' எனக்கூறி விடை பெற்றோம்.
பெண்ணி உயரத்தில் தான் நிறைய சந்தேகங்கள்... என் உயரம் 172சிஎம்... பெண்ணின் குறிப்பின் படி அவரின் உயரம் 165சிஎம்.. ஆனால் நேரில் பார்க்கையிலே என் உயரத்திற்கு ஈடாகவே தெரிந்தார். இதிலும் எனக்கும் குழப்பமில்லை.. சம்மதமே.. ஏனேனில் சீனாவில் நிறைய தம்பதிகள்.. ஜோடிகள் இது போல சம உயரத்திலும்.. ஆண் உயரம் குறைந்து கண்டுள்ளேன். எனக்கு அதில் எவ்வித சிந்தனையும் இல்லை.

பெண் வீட்டாரின் பதில் என்னவாக இருந்திருக்கும்... ???


- தொடரும்...

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

hi saraj....hw r u

Unknown சொன்னது…

i am fine madam... thx and How about you?